இந்தியா

ஆம்புலன்ஸ் அலட்சியம்: நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்கள்!

webteam

ஆம்புலன்ஸின் அலட்சியத்தால் இரண்டு பெண்கள், நடுரோட்டில் குழந்தைப் பெற்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் சம்பாவத் மாவட்டத்தில் உள்ளது, பொகாரி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் ரேகா தேவி. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டது. அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸ் சேவைக்கு ஃபோன் செய்தனர். யாருமே எடுக்கவில்லை. இதையடுத்து மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து மாவட்ட மருத்துமனைக்கு வந்தனர். அங்கு டாக்டர் இல்லை. உடனடியாக தனியார் மருத்துவமனைக்குச் செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். 

இதுபற்றி ரேகாவின் உறவினர் சுனில் குமார் கூறும்போது, ‘நீண்ட தூரம் நடந்தே மருத்துவமனைக்கு வந்தோம். டாக்டர் இல்லாததால் வேறு மருத்துவமனைக்குச் செல்லுமாறு கூறினர். பின்னர் இங்கிருந்தும் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து ஒரு மணி நேரம் காத்திருந்தோம். ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. கோபத்தில் வேறு வாகனத்தை வாடகைக்கு எடுத்து 75 கி.மீ தூரத்தில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றோம். வரும் வழியில் பிரசவ வலி அதிகரித்தது. சாலையோரம் வண்டியை நிறுத்தினோம். அங்கு குழந்தை பிறந்துவிட்டது’ என்றார்.

(கோப்பு படம்)

இதே போல இதே மாவட்டத்தில் உள்ள சுகிதக் கிராமத்திலும் நடந்துள்ளது. இங்குள்ள கலாவதிக்கு பிரசவ வலி. தனக்பூர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல முடிவு செய்தனர். ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்தால் யாரும் எடுக்கவே இல்லை. வேறு வாகனத்தில் சென்றனர். செல்லும் வழியிலேயே குழந்தைப் பிறந்துவிட்டது. 

சம்பாவத் மாவட்ட மருத்துவமனையில் ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே இருக்கிறார். அவர் விடுப்பு என்பதால் மற்ற மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஆம்புலன்ஸ் அலட்சியத்தால் நடுரோட்டில் இரண்டு பெண்கள் குழந்தைப் பெற்றச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.