இந்தியா

3 அரசு மருத்துவமனைகளில் அனுமதி மறுப்பு: ஆட்டோவில் பிரசவம் நடந்ததால் குழந்தை இறப்பு!

webteam

3 அரசு மருத்துவமனைகளில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ஆட்டோவிலேயே கர்ப்பிணிக்கு பிரசவம் நடந்துள்ளது. இதில் குழந்தை உயிரிழந்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு பிறகு கர்நாடக மருத்துவமனைகள் மீது அவ்வப்போது குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. புற நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பது, ஆம்புலன்ஸ் தாமதம் என தொடர் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. இந்நிலையில் கர்ப்பிணி ஒருவரை 3 அரசு மருத்துவமனைகள் அனுமதிக்காததால் அவருக்கு ஆட்டோவிலேயே பிரசவம் நடந்துள்ளது. இதில் குழந்தை உயிரிழந்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையில் படுக்கை வசதி இல்லை என கர்ப்பிணியை திருப்பி அனுப்பியுள்ளனர்.

இப்படி 3 மருத்துவமனைகளில் கர்ப்பிணி திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் கேசி மருத்துவமனை வெளியே ஆட்டோவில் சென்றபோதே அவருக்கு பிரசவம் ஆகியுள்ளது. இதில் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அனுமதி மறுத்த மருத்துவமனைகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் முதல்வர் சித்தராமையா ட்வீட் செய்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை மறுக்கப்படுவதால் கொரோனா இல்லாமலேயே பலர் உயிரிழக்கிறார்கள். சிகிச்சை மறுக்கப்படும் மருத்துவமனைகளின் உரிமம் ரத்து செய்யப்பட வேண்டுமென பதிவிட்டுள்ளார்.