இந்தியா

"பாஜக ஆட்சியில் ஜனநாயகம் மூச்சு திணறி வருகிறது" - ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!

webteam

நாடாளுமன்றம் செயலிழந்து விட்டதாகவும், ஏறக்குறைய அனைத்து துறைகளும் அடக்கி வைக்கப்பட்டிருப்பதால் ஜனநாயகம் சுவாசிக்க முடியாமல் திணறி வருவதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கும் சூழலில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்த நிலையில், அதில் இருந்து அவரை காப்பாற்ற மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தவறி விட்டார் என்றும் சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

ராமர் கோயில் அடிக்கல் தின ஆண்டு விழாவை எதிர்க்கும் நோக்கிலேயே கடந்த வெள்ளிக்கிழமை காங்கிரஸ் நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தியதாக உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்தை ஏற்க முடியாது என்றும் சிதம்பரம் கூறினார். டெல்லியில் அனைத்து எம்.பி.க்களும் இருக்கும் தினத்தை தேர்வு செய்தே போராட்டம் நடத்தப்பட்டதாகவும், இதற்கும் ராமர் கோயில் அடிக்கல் தின விழாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார்.