இந்தியா

நண்பர்களிடம் 'சீன்' போட தந்தையின் துப்பாக்கி - கம்பியை எண்ண வெச்ச போலீஸ்

JustinDurai

நண்பர்களிடம் 'சீன்' போடுவதற்காக தனது தந்தையின் துப்பாக்கியை பார்ட்டிக்கு எடுத்துவந்த நபரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

வடக்கு டெல்லியின் ரூப் நகர் பகுதியில் 22 வயதான ஹர்ஷ் என்பவர் துப்பாக்கியை விருந்து நிகழ்ச்சிக்கு எடுத்து வந்ததற்காக கைது செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணியளவில் பார்ட்டி முடிந்ததும் அந்த இளைஞர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையில் 'லிஃப்ட்' கேட்டுக் கொண்டிருக்கையில் போலீசாரைக் கண்டதும் ஒளிந்துகொள்ள முயன்றுள்ளார். சந்தேகமடைந்த போலீசார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரிக்கையில் துப்பாக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். தோட்டாக்களுடன் கூடிய அந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இது தனது தந்தை வைத்திருந்த துப்பாக்கி எனவும், பார்ட்டியில் நண்பர்களிடம் 'கெத்து' காண்பிப்பதற்காக இதை எடுத்து வந்ததாகவும் அந்த இளைஞர் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த துப்பாக்கியின் உரிமத்தை ஆய்வு செய்த போலீசார் அது ராகேஷ் சோலங்கி என்பவரின் பெயரில் இருந்த துப்பாக்கி என்பதும், அவருக்கு காவலாளியாக இருந்துவந்த அந்த இளைஞரின் தந்தைதான் துப்பாக்கியை தனது பொறுப்பில் வைத்திருந்ததும் விசாரணையில் கண்டறியப்பட்டது. தந்தைக்கு தெரியாமல் துப்பாக்கியை எடுத்துவந்து பார்ட்டியில் நண்பர்களிடம் காண்பித்துள்ளார் அந்த இளைஞர். இதையடுத்து அந்த இளைஞரின் தந்தையை போலீசார் வரவழைத்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.  

தவற விடாதீர்: 'நாங்க NIA அதிகாரிகள் காச எடுங்க' - லட்சக்கணக்கில் மோசடி ! பாஜக நிர்வாகி உள்பட 6 பேர் சரண்