model image
model image freepik
இந்தியா

4,000 அனாதை சடலங்கள்.. அடக்கம் செய்த 26 வயது பெண்.. அதனால் ஏற்பட்ட சிக்கல்?

Prakash J

இந்த உலகில் ஒருவர் எந்த வேலையை விரும்பியபடி, ஏற்றுச் செய்தாலும், அதைக் குறைகூறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். அதிலும் பெண்கள் அப்படியொரு வேலையைச் செய்துவிட்டால் போதும், ’பெண்களுக்குப் பெண்களே எதிரி’ என்பதைப்போல அவர்களைத் தூற்றி எடுத்து விடுவார்கள். ஆனாலும் அவர்களின் ஏளனச் சொல்லுக்குக் கவலையில்லாமல் தம் வேலையை விருப்பம்போல் செய்பவர்களும் உள்ளனர் என்பதற்கு ஓர் உதாரணம், தலைநகர் டெல்லியில் அனாதை சடலங்களை அடக்கம் செய்யும் இளம்பெண்.

model image

தலைநகர் டெல்லி ஷாஹ்தரா பகுதியைச் சேர்ந்தவர் பூஜா ஷர்மா. 26 வயதான இவர், நீண்டகாலமாக மருத்துவமனைகளில் உரிமை கோரப்படாமல் இருக்கும் சடலங்களை எடுத்து முறைப்படி அடக்கம் செய்துவருகிறார். இதுபோன்ற சடலங்களை அடக்கம் செய்ய குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை செலவாகுவதாகச் சொல்லும் பூஜா, அதற்காக தன் தாத்தாவின் ஓய்வூதியத்தில் வரும் பணத்தை எடுத்துச் செல்வு செய்வதாகக் கூறியுள்ளார். அவருடைய தந்தை மற்றும் பாட்டியுடன் தங்கியிருக்கும் பூஜா, கடந்த 2 ஆண்டுகளில், குடும்பம் அல்லது உரிமை கோரப்படாமல் இருந்த சுமார் 4,000 உடல்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்துள்ளார்.

இதுகுறித்து பூஜா ஷர்மா, “30 வயதான எனது மூத்த சகோதரர், கடந்த 2022-ஆம் ஆண்டு, சிறு மோதல் ஒன்றின்போது என் கண்முன்னே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த செய்தியைக் கேட்ட என் அப்பா, கோமா நிலைக்கு சென்றுவிட்டார். அப்போது, நான்தான் என்னுடைய சகோதரனுக்கு இறுதிச்சடங்குகளைச் செய்தேன்.

அன்று ஆரம்பித்த இந்தச் சேவைப் பயணம், இன்றுவரை தொடர்கிறது. ஆரம்பத்தில் முகவரி தெரியாத உடல்கள் பற்றிய தகவல்களை பெற காவல்துறை மற்றும் அரசு மருத்துவமனைகளை தொடர்புகொண்டேன். இப்போது அவர்களே, இதுபோன்ற உடல்கள் குறித்து தகவல் தெரிவிக்கின்றனர்.

model image

தற்போது, எனது தந்தை கோமாவில் இருந்து விடுபட்டு தற்போது டெல்லி மெட்ரோவில் ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநராகப் பணிபுரிகிறார். மனம்விரும்பி இத்தகைய சேவையை நான் செய்து வந்தாலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சேவையை பலரும் ஒரு தடையாகவே பார்க்கிறார்கள். இதனால், என்னை சந்திக்கவிடாமல் என் நண்பர்களை அவர்களின் குடும்பத்தினர் தடுப்பது மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. அத்துடன், இந்தப் பணிகளை செய்வதால் எனது திருமணத்திற்கும் பல தடைகள் வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.