இந்தியா

கல்லூரி படிப்பின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி : மாணவர்கள் புகார்

கல்லூரி படிப்பின் ஆன்லைன் தேர்வில் குளறுபடி : மாணவர்கள் புகார்

webteam

டெல்லியில் அரசியல் அறிவியல் இளங்கலை படிப்பின் ஆன்லைன் தேர்வில் வினாத்தாள் வழங்கப்பட்டதில் குளறுபடிகள் இருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

டெல்லியில் மூன்றாம் ஆண்டு பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு, டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆன்லைன் தேர்வுகள் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடத்தப்பட்டன. இந்தத் தேர்வில் ஒரு லட்சத்திற்கும் மேலான மாணவர்கள் பங்கேற்றனர். காலையில் 11.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கின. இணையதளத்தில் வினாத்தாள்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதும், அதைக்கொண்டு மாணவர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.

ஆனால் 12 மணியளவில் மற்றொரு வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டதாக மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த வினாத்தாளை ஏராளமான மாணவர்கள் கவனிக்காமல் முதலில் கொடுத்த வினாத்தாளைக் கொண்டே தேர்வை எழுதியுள்ளனர். பலர் இறுதியாக விடைத்தாளை சமர்ப்பிக்கும்போதே மற்றொரு வினாத்தாள் கொடுக்கப்பட்டதை கண்டுள்ளனர். இதனால் பலரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். வினாத்தாள் குளறுபடி தொடர்பாக அவர்கள் பல்கலைக்கழத்திடம் புகார்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுதொடர்பாக விளக்கமளித்துள்ள டெல்லி பல்கலைக்கழகம், அனைத்து மாணவர்களுக்கும் வினாத்தாள்களில் குளறுபடிகள் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளது. அதேசமயம் குளறுபடிகள் ஏற்பட்ட மாணவர்களுக்கு மட்டும் மீண்டும் தேர்வு நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது.