இந்தியா

ஸ்ரத்தா வாக்கர் படுகொலை விவகாரம் - குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய டெல்லி போலீஸ் திட்டம்

PT

டெல்லியில் இளம்பெண் ஸ்ரத்தா வாக்கர் படுகொலை விவகாரத்தில் டெல்லி காவல்துறை இன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யுப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

டெல்லியில் தனது காதலியை கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டி அதனை டெல்லியின் பல இடங்களில் வீசிய விவகாரத்தில் இளம் பெண் ஸ்ரத்தா வாக்கரின் காதலர் அப்தாப் பூனவாலா டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை உள்ளிட்ட பல்வேறு முறைகளில் விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் அவரது நீதிமன்ற காவல் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனக்கு படிப்பதற்கு புத்தகங்கள் வேண்டும் என அப்தாப் கேட்டபோது, அவர் கேட்கும் புத்தகங்களை வழங்கவும் குளிருக்கு கதகதப்பான உடைகளை வழங்கவும் சிறைத்துறை நிர்வாகத்திற்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதற்கிடையில் ஸ்ரத்தா வாக்கரின் எலும்புகள் மரபணு சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதுவும் உறுதி செய்யப்பட்டது.

அனைத்து வகையான விசாரணைகளையும் நடத்தி முடித்துள்ள டெல்லி காவல்துறை விரிவான குற்றப்பத்திரிகை தயார் செய்து இருந்த நிலையில் அதை இன்றைய தினம் டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளது.