டெல்லி மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் அடிபட்டு கிடந்த ஆண் மயிலால் சுமார் 30 நிமிடம் மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது.
டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் காலை நேரங்களில் பரபரப்பாக காணப்படும். ஏகப்பட்ட பயணிகள் அதில் பயணம் செய்வார்கள். இந்நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் மாடல் டவுன் மெட்ரோ ரயில் நிலையத்தை ரயில் ஒன்று வந்தடைந்தது. பின்னர் பயணிகள் ஏறி, இறங்கிய பின் ரயில் கிளம்பும் என பார்த்தால் அது கிளம்பவில்லை. காரணம் மெட்ரோ ரயில் தண்டவாளத்தில் காயமடைந்தபடி ஆண் மயில் ஒன்று கிடந்தது. “அதுவும் உயிர்தானே.. நகர்ந்து செல்லட்டும்” என காத்திருந்த மெட்ரோ ரயில் டிரைவர் அதனை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தார்.
என்ன ஆச்சு.. ஏன் ரயில் போகவில்லை என பதறிய ரயில் பயணிகள் ஒவ்வொருவராக அதில் இருந்து இறங்க ஆரம்பித்தனர். பின்னர் தண்டவாளத்தில் மயில் ஒன்று எழுந்து போக முடியாமல் கிடப்பதை கண்ட பயணிகள் அதனை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர். அதில் கூடியிருந்த ஒருசிலர் அந்த மயிலை புகைப்படம் எடுக்கவும் ஆரம்பித்தனர். பின்னர் அங்கு வந்த மெட்ரோ ரயில் நிலைய பணியாளர்கள் சிலர், உயிருக்குப் போராடி அந்த மயிலை பிடித்தனர். அதன்பின் அந்த மயில் வனத்துறை அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது. இதனால் அந்த மெட்ரோ ரயில் சுமாராக 30 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
“நம்மை போன்று அதுவும் ஒரு உயிர்தானே என நினைத்து ஓட்டுநர் அது பாதுகாப்பாக அகற்றப்படும் வரை ரயிலை இயக்காமல் காத்திருந்தார். எங்களுக்கும் அலுவலகம் செல்வதில் நேரம் தாமதமானது. இருந்தாலும் 30 நிமிடம் காத்திருந்தாலும் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டதே, அந்த நிம்மதி எங்களுக்குள் இருந்தது” என மெட்ரோவில் பயணம் செய்த பயணி ஒருவர் தெரிவித்தார்.