பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 1976-2001 காலகட்டத்தில் வெளியான 134 படங்களின் பாடல்களுக்கு உரிமை கோரிய விவகாரத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது. 1957 காப்புரிமைச் சட்டப்படி, படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு, தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என நீதிமன்றம் உறுதிசெய்து, சரிகமா நிறுவனத்தின் காப்புரிமை உள்ள பாடல்களை இளையராஜா வணிகரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.
செய்தியாளர் - M. மீரா
பிரபல இசையமைப்பாளர் இளையராஜா 1,500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ளார். பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவரது பாடல்கள் பல ரீமேக் செய்யப்பட்டுள்ளன. இவர் தான் இசையமைத்த படங்களின் பாடல்களுக்கு உரிமை கோரி வந்தார்.
இந்நிலையில் சரிகமா நிறுவனத்திடம் காப்புரிமை (copyright) உள்ள படைப்புகளை இசையமைப்பாளர் இளையராஜா வணிகரீதியாகப் பயன்படுத்துவதாகவும், அவற்றுக்கு உரிமம் வழங்குவதாகவும் குற்றம்சாட்டி 'சரிகமா' (Saregama) நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில் 1976-2001 வரை பல தயாரிப்பாளர்களுடன் ஒப்பந்தம் செய்து படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமையை சட்டப்படி பெற்றிருந்ததாகவும், ஆனால் இளையராஜா அந்தப் பாடல்களை தன்னுடைய சொந்த பாடல்கள் என்று கூறி பிற ஆன்லைன் தளங்களில் பதிவேற்றியுள்ளார். எங்கள் நிறுவனத்தின் பாடல்கள், இசையைப் பயன்படுத்த இளையராஜாவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக் கோரியிருந்தனர். 1957 ஆம் ஆண்டின் காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
இதை விசாரித்த நீதிபதிகள், சரிகமா நிறுவனத்தின் காப்புரிமைக்கு உட்பட்ட படைப்புகளைப் பயன்படுத்துவது, வணிகரீதியாகச் செயல்படுத்துவது, உரிமம் வழங்குவது அல்லது அவற்றின் மீதான உரிமையைக் கோருவது ஆகியவற்றிலிருந்து இளையராஜாவைத் தடுத்து நிறுத்தி பிப்ரவரி 13 இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த இடைக்கால உத்தரவை ரத்து செய்யக் கோரி இசையமைப்பாளர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், காப்புரிமைச் சட்டத்தின்படி , ஒரு படத்திற்காக உருவாக்கப்பட்ட இசைக்கு அந்த தயாரிப்பாளரே உரிமையாளர் என்றும் இளையராஜா அல்லது அவர் சார்ந்த பிரதிநிதிகள், சரிகம வசம் உள்ள அந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது என தடை விதித்துள்ளது.