இந்தியா

கொரோனாவால் இறந்த இளம் மருத்துவர் - சிகிச்சைக்கு செலுத்த பணமில்லாமல் தவித்த பெற்றோர்

கொரோனாவால் இறந்த இளம் மருத்துவர் - சிகிச்சைக்கு செலுத்த பணமில்லாமல் தவித்த பெற்றோர்

EllusamyKarthik

மத்திய பிரதேசத்தின் சிங்ராலியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜோகிந்தர் சவுத்ரி. 27 வயது இளைஞர். கடந்த நவம்பர் மாதம் முதல் டெல்லியில் இயங்கி வரும் பாபா சாஹேப் அம்பேத்கர் மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

டெல்லியில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமிருப்பதால் கடந்த சில மாதங்களாவே கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவராக ஜோகிந்தர் பணியாற்றி வந்துள்ளார். 

அவருக்கு கடந்த மாதம் கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டதால் பரிசோதனை மேற்கொண்டுள்ளார். அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யயப்பட்டுள்ளது. அதனையடுத்து டெல்லியில் உள்ள லோக் நாயக் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவரது உடல் நிலை மோசமானதால் சர் கங்கா ராம் தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று இறந்துள்ளார். சுமார் ஒரு மாத கால போராட்டத்திற்கு பிறகு இள வயது மருத்துவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளது பெருத்த சோகத்தை மருத்துவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. 

விவசாயியான அவரது தந்தையால் சிகிச்சைக்கான பணத்தை செலுத்த முடியாத நிலையில் அவரோடு பணியாற்றிய சக மருத்துவர்கள் தங்களால் முடிந்த நிதியாக சுமார் 2.8 லட்ச ரூபாயை திரட்டி கொடுத்துள்ளனர். அந்த மருத்துவமனை நிர்வாகத்திற்கு உதவி கேட்டு ஜோகிந்தரின் தந்தை எழுதிய கடிதத்தை தொடர்ந்து சிகிச்சை கட்டணத்திற்கு அந்த மருத்துவமனை நிர்வாகம் விலக்கு கொடுத்துள்ளது.