இந்தியா

டெல்லி: காவல்நிலையத்திற்குள் புகுந்து காவலரைத் தாக்கி மன்னிப்பு கேட்கச் செய்த கும்பல்!

ச. முத்துகிருஷ்ணன்

டெல்லியில் ஆனந்த் விகார் காவல் நிலையத்திற்குள் புகுந்த கும்பல் ஒன்று, அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலரைத் தாக்கி மன்னிப்பு கேட்கச் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 3 ஆம் தேதி டெல்லியில் ஆனந்த் விகார் காவல் நிலையத்திற்குள் புகுந்த மர்ம கும்பல் ஒன்று, அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலரைச் சூழ்ந்து அவரது சட்டையை பிடித்து இழுத்து, கன்னத்தில் அறைந்து அவரை மன்னிப்பு கேட்கச் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரை சூழ்ந்து கும்பல் தாக்குதலை தொடரும்போதும், காவல்நிலையத்திற்குள் இருந்த மற்ற காவலர்கள் அதை தடுக்க முற்படாமல் அமைதியாக இருந்ததும் வீடியோவில் பதிவாகியுள்ளது.

தாக்குதல் நடத்திய கும்பல் யார்? எதற்காக இந்த தாக்குதல் நடத்தினார்கள்? ஏன் தலைமைக் காவலரை மன்னிப்பு கேட்கச் செய்தனர்? ஆகிய கேள்விகளுக்கு தற்போது வரை டெல்லி காவல்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது. தலைமைக் காவலரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த டி.எஸ்.பி., இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.