இந்தியா

டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் கிரண்பேடி - அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் கிரண்பேடி - அரவிந்த் கெஜ்ரிவால்

webteam

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடிக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் அரசு நிர்வாகத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுவதாகக் கூறி ஆளுநர் மாளிகை அருகே முதலமைச்சர் நாராயணசாமி கறுப்பு சட்டை அணிந்து கடந்த 13-ஆம் தேதி தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அதேசமயம் நாராயணசாமி போராட்டத்தை தொடங்கிய மறுநாள் துணை ஆளுநரான கிரண்பேடி புதுச்சேரியிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். 

ஆனால் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தர்ணா போராட்டம் தொடரும் எனக் கூறி, தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தர்ணா போராட்டத்தை நடத்தி வருகிறார் நாராயணசாமி. அவருடன் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். 

இதனிடையே நேற்று புதுச்சேரி வந்த ஆளுநர் கிரண்பேடி பேச்சுவார்த்தைக்காக முதலமைச்சர் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்க முடியாது என தெரிவித்தார். அதனால் பேச்சுவார்த்தையில் இழுப்பறி நிலை ஏற்பட்டது. நாராயணசாமி போராட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின், விசிக தலைவர் திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று முதலமைச்சர் நாராயணசாமி நடத்தி வரும் தர்ணா போராட்டத்திற்கு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார். அவருடன் டெல்லி துணை முதலமைச்சரும் உடனிருந்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால், “நாராயணசாமி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவே நேரில் வந்தேன். டெல்லியில் நிலவும் பிரச்னை போன்றே புதுச்சேரியிலும் நிலவுகிறது. தேர்தலில் டெல்லி மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் புதுச்சேரியை ஆட்சி செய்கிறார்” எனத்தெரிவித்தார்.