இந்தியா

இந்திரனை வேண்டி அரசே யாகம் நடத்த வேண்டும் - உ.பி அமைச்சர்

rajakannan

மழை வருவதற்காக இந்திரனை வேண்டி அரசே யாகம் நடத்த வேண்டும் என்று உத்தரப்பிரதேச அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

காற்று மாசுபாடு டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அவசரநிலை பிரகடனம் செய்யும் அளவிற்கு இந்த பாதிப்பு சென்றுள்ளது. சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து என எல்லாமே பாதிப்படைந்துள்ளது. இந்த காற்று மாசுபாட்டிற்கு டெல்லியை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் அறுவடைக்கு பின்னர் எரியூட்டப்படுவதும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில், அறுவடைக்கு பின்னர் நிலங்கள் எரியூட்டப்படுவதை விவசாயிகள் தங்கள் பாரம்பரிய நடைமுறையாகவே வைத்துள்ளனர் என்று உத்திரபிரதேச அமைச்சர் சுனில் பராலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஏஎன்ஐ-க்கு அவர் அளித்த பேட்டியில், “விவசாயிகள் அறுவடைக்கு பின்னர் தங்களது நிலத்தை எரியூட்டுவது வழக்கமான இயற்கை நடைமுறைதான். 

இதுதொடர்பாக தொடர்ச்சியாக விமர்சனங்கள் எழுந்து வருவது துரதிருஷ்டவசமானது. பாரம்பரிய வழக்கப்படி, மழைக் கடவுளான இந்திரனை வேண்டி அரசே யாகம் நடத்த வேண்டும். கடவுள் இந்திரர் எல்லாவற்றையும் சரி செய்துவிடுவார்” என்று கூறியுள்ளார்.