டெல்லியில் நிலவும் கடுமையான காற்று மாசினை சமாளிக்க பொது மக்களுக்கு சில யோசனைகளை அரசு வழங்கியுள்ளது.
தரமான முகமூடி உறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும், மூச்சு இரைக்கும் வகையிலான உடற் பயிற்சிகளை தவிர்ப்பது நலம் எனவும் கூறப்பட்டுள்ளது. இன்ஹேலர், நெபுலேசர் போன்ற மூச்சு கருவிகளை எப்போதும் தயார் நிலையில் வைத்திருத்தல் நல்லது எனவும், வீட்டில் உள்ள கதவு, சன்னல்களை சரியாக மூடி வைப்பதுடன், சூடான நீர் கொண்டு ஆவி பிடிக்கவும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் கடுமையான காற்று மாசு அளவு பதிவாகியுள்ளது. காற்று தர குறியீடு பூஜ்யம் முதல் 50 வரை இருந்தால் சுவாசிப்பதற்கு உகந்ததாக கருதப்படுகிறது. இந்த நிலையில், டெல்லியில் காற்று தரக் குறியீடு எண் 500ஐ கடந்துள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள், குடியிருப்புகள் அமைந்துள்ள லோதி சாலையில் காற்று தரக்குறியீட்டு எண் 500 எனப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.