இந்தியா

காணாமல் போன இளம்பெண் சாக்கு பையில் சடலமாக கண்டெடுப்பு

webteam

டெல்லியில் காணமல் போன இளம்பெண் ஒரு சாக்கு பையிலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

டெல்லியில் பட்டப்படிப்பை முடித்த இளம்பெண் ஒருவர் அவரது மேற்படிப்பை ஹரியானாவை தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம் ஒன்றில் படித்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 25 ஆம் தேதி முன்னாள் ஆசிரியரை சந்தித்துவிட்டு வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை. அவரது பெற்றோர் தொலைபேசிக்கு முயற்சி செய்தும் லைன் கிடைக்கவில்லை. 

இதையடுத்து அப்பெண்ணின் பெற்றோர் அருகில் இருந்த காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7.48 மணியளவில் கரவால் நகர் பகுதி வடிகால் ஒன்றில் சாக்கு பை ஒன்று கிடப்பதாக பி.சி.ஆருக்கு அழைப்பு வந்தது. 

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் கோணியில் இருந்து காணமல் போன பெண்ணின் சடலத்தை மீட்டனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “முதலில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தை நெரித்ததாகத் தெரிகிறது. சடலத்தை அவரது பெற்றோர் அடையாளம் காட்டினர். அந்தப் பெண் அவரது பெற்றோர் மற்றும் இரண்டு சகோதர்களுடன் வசித்து வந்துள்ளார். சந்தேகத்திற்கு இடமான நபர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்” எனத் தெரிவித்தனர். 

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் மாமா கூறுகையில், “அவள் பள்ளியில் படிக்கும் போது அருகிலுள்ள ஒரு ஆசிரியரின் கீழ் டியூசனில் படித்துக் கொண்டிருந்தாள். பின்னர், அந்த ஆசிரியரின் டியூசனில் அவளும் அவரது பெற்றோருக்கு தெரியாமல் வகுப்பு சொல்லிக்கொடுத்து கொண்டு இருந்திருக்கிறார். கடந்த 25 ஆம் தேதி அந்த ஆசிரியரை பார்த்து விட்டு வருவதாகத்தான் வீட்டில் சொல்லிவிட்டு சென்றுள்ளார். அந்த டியூசன் ஆசிரியருக்கு இதில் சம்பந்தம் இருக்குமோ என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.