ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் பகுதியில் இயங்கி வந்த ஒரு பட்டாசு உற்பத்தி ஆலையில், 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காலையிலிருந்து பணி புரிந்து வந்தனர். இந்நிலையில், இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த பட்டாசு ஆலையில் பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென ஏரிந்ததால் உள்ளே இருந்தவர்கள் வெளியே வர முடியவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 21 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்திருப்பதாகவும், 8 பேர் படுகாயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விபத்தில் சிக்கியவர்கள் உடல் கருகி இறந்திருப்பதால் அடையாளம் காணமுடியாத சூழல் நிலவி வருகிறது. மேலும், இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண் தொழிலாளர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இடிபாடுகளில் சிக்கியவர்களை தீயணைப்புத் துறையினர் மீட்டு ஆம்புலன்ஸ்களில் மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து, மதியம் 2 மணியளவில் 5 கி.மீ தூரம் வரை வெடி சத்தம் கேட்டதாக விபத்து நடந்த பகுதியில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “ காக்கிநாடா மாவட்டம் வெட்லபாலெம் பகுதியில் உள்ள ஒரு பட்டாசு உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கடினமான தருணத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்குத் துணையாக அரசு நிற்கும். விபத்தில் காயமடைந்தவர்களுக்குக்கு காக்கிநாடா அரசு மருத்துவமனையில் உயர்தர சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, ”ஆந்திரா மாநிலம் காக்கிநாடாவில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ. 2-லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரமும் வழங்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.