இந்தியா

மதகுரு ஆனார் ஒரே மகன்: தாதா தாவூத் இப்ராஹிம் அப்செட்!

webteam

தனது ஒரே மகன் இஸ்லாமிய மதகுருவாக மாறிவிட்டதால், தாவூத் இப்ராஹிம் அப்செட் ஆகியுள்ளதாக அவரது தம்பி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர் நிழல் உலக தாதா, தாவூத் இப்ராஹிம். மும்பையில் இருந்து தப்பிய இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. துபாயில் பிசினஸ் செய்து வரும் இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். முதல் மகள் இறந்துவிட்டார். மற்ற மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. 31 வயது மகன், மொயின் நவாஸ் டி. கஸ்கர், பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள மசூதி ஒன்றில் மவுலானாவாக பணியாற்றுகிறார். தனக்குப் பிறகு தன் நிழல் உலகத் தொழிலை மகன் கவனிக்க வேண்டும் என்று நினைத்த தாவூத்தின் கனவு இதன் மூலம் தகர்ந்துள்ளது. இதனால் அவர் அப்செட் ஆகியுள்ளார். 

இந்த தகவலை, தாவூத்தின் தம்பி இக்பால் கஸ்கர், மும்பை போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் தொழிலதிபர் ஒருவரை, பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தானே போலீசாரால் கைது செய்யப்பட்ட இக்பால், விசாரணையின் போது இத்தகவலை தெரிவித்துள்ளார்.