இந்தியா

தாயின் ஆசையை நிறைவேற்ற ICU-ல் மணமுடித்துக்கொண்ட மகள்... பீகாரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

JananiGovindhan

வீடுகளில், வழிபாட்டு தலங்களில், மண்டபங்களில், கடற்கரைகளில் என பல இடங்களில் திருமண நிகழ்வுகளில் நடைபெறுவதுண்டு. ஆனால் பீகாரை சேர்ந்த இந்த ஜோடி மருத்துவமனையின் ICU-ல் மாலைமாற்றி திருமணம் செய்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அதன்படி பீகாரை சேர்ந்த சாந்தினி என்ற பெண்ணுக்கும் சுமித் கவுரவ் என்ற நபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் திடீரென சாந்தினியின் தாயார் பூனம் குமாரி வெர்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

சிகிச்சையில் இருந்து வந்த பூனமிற்கு தனது மகளின் திருமணத்தை எப்படியாவது பார்த்திட வேண்டும் என்ற எண்ணம் இருந்திருக்கிறது. ஆகையால் அவரது ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்ற நோக்கில் சாந்தினியும் சுமித் கவுரும் இணைந்து இரு வீட்டாரின் சம்மதத்தையும் பெற்று ஐ.சி.யூவில் சிகிச்சையில் இருந்த பூனம் குமாரி முன்பு இருவரும் திருமணம் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.

அப்போது தாயின் உடல்நிலையை நினைத்து கவலையில் சாந்தினி கவலையில் இருந்ததால், “நீங்கள் உடல்நலம் தேறிவிடுவீர்கள்” என சுமித் பூனம் குமாரியிடம் ஆறுதலாக பேசியிருக்கிறார். இருப்பினும் சாந்தினி - சுமித் கவுரின் திருமணத்துக்கு பிறகு, பூனம் குமாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார்.