உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருந்த முஷார் என்ற தலித் மக்களை சோப்பு, ஷாம்பு மற்றும் செண்ட் கொடுத்து அதிகாரிகள் சுத்தமாகச் சொல்லியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் முஷார் சமூகத்தை சேர்ந்தவர்கள் தீண்டப்படாத மக்களாக கருதப்படுகின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் முஷார் சமூக மக்களை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. அதற்கு முன்னதாக முஷார் மக்களை சந்தித்த அதிகாரிகள், அவர்களுக்கு சோப்பு, ஷாம்பு மற்றும் செண்ட் ஆகியவற்றை விநியோகம் செய்து, முதல்வரை சந்திக்கும் போது சுத்தமாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளனர்.
மேலும் அவர்கள் வசிக்கும் பகுதிக்கு அதாவது முதல்வர் வரும் பகுதிக்கு தெரு விளக்கு போடப்பட்டது, மண் தரைகள் புதிய தார் சாலைகளாக அமைக்கப்பட்டது மற்றும் புதிய கழிவறைகள் கட்டப்பட்டது.
உத்திர பிரதேசத்தில் இதுபோன்று நடப்பது முதல்முறை அல்ல, ஏற்கனவே பல சம்பவங்கள் நடந்துள்ளன. உதாரணமாக காஷ்மீரில் உயிர் தியாகம் செய்த தியாகி ஒருவரின் வீட்டிற்கு முதல்வர் யோகி வருகைதர உள்ளார் என்பதற்காக, தியாகியின் வீட்டில் புதிய இருக்கைகள், ஏசி மற்றும் புதிய தரை விரிப்புகள் ஆகியவை அதிகாரிகளால் அமைக்கப்பட்டன. முதல்வர் யோகி தியாகியின் வீட்டிற்கு வந்து சென்றவுடன், உடனடியாக அந்த பொருட்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், உத்தரப்பிரதேசத்தில் பெண்களுக்கு எதிராகவும், சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களுக்கு எதிராக தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. உ.பி.யை குற்றமில்லாத மாநிலமாக்குவோம் என்று பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால் இந்த வன்முறைச் சம்பவங்கள் குறித்துப் பேசிய போது உபி மூத்த அமைச்சர் சுரேஷ் கன்னா, ’குற்றமே நடக்காது என்று நாங்கள் உறுதியளிக்கவில்லை’ என்று கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.