இந்தியா

மனைவியுடன் சண்டை - 2 வயது மகனை பால்கனியில் இருந்து வீசிவிட்டு தானும் கீழே குதித்த நபர்!

webteam
மனைவி உடனான தகராறில் இளைஞர் ஒருவர் தனது 2 வயது குழந்தையை பால்கனியில் இருந்து கீழே வீசிவிட்டு அவரும் கீழே குதித்த அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நிகழ்ந்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்தவர் மான் சிங்(30). அவரது மனைவியின் பெயர் பூஜா. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர்கள் இருவரிடையே தொடர்ச்சியாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. பின்னர், கருத்து வேறுபாடு  காரணமாக சில மாதங்களாக, தனித்து வாழ்ந்து வருகின்றனர்.  பூஜா அவரது 2 குழந்தைகளுடன் கல்காஜியில் உள்ள தனது பாட்டியின் வீட்டில் தங்கி இருந்திருக்கிறார்
கடந்த வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 16) குடும்பத்தைக் காண மான் சிங் அங்கு வந்துள்ளார். பிறகு கணவன் - மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் தனது 2 வயது மகனை பால்கனியில் இருந்து கீழே வீசியுள்ளார் சிங். பிறகு அவரும் கீழே குதித்துவிட்டார். இரவு 7 மணியளவில் மான் சிங் அங்கு வந்த நிலையில், 2-3 மணி நேர வாக்குவாதத்திற்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனையடுத்து, காயமடைந்த  இருவரும் AIIMS மருத்துவமனையில் மிக கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று காவல்துறையினர் கூறுகின்றனர். முதல் மாடியில் இருந்து தந்தையும், 2 வயது மகனும் கீழே விழுந்துள்ளநிலையில், தரையில் இருந்து 21 அடி உயரம் இருக்கும் என போலீசார் கூறுகின்றனர்.
பூஜாவின் பாட்டி, சிங் வீட்டுக்கு வரும்போது குடித்து விட்டு வந்ததாக புகார் அளித்துள்ளார். அதனால், மான் சிங்கின் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, இந்த சம்பவம் தொடர்பாக டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-ஷர்நிதா