இன்று மாலை புயல் உருவாக உள்ளதால், மீனவர்கள் வட கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அரபிக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும். இந்த புயலுக்கு நிசர்கா எனப் பெயரிடப்பட்டுள்ளது. தற்போது அரபிக் கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் 11 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது.
மும்பையில் இருந்து தெற்கு தென்மேற்கு திசையில் 490 கிலோ மீட்டர் தொலைவிலும் குஜராத்தின் சூரத் நகரில் இருந்து 710 கிலோ மீட்டர் தெற்கு தென்மேற்கு திசையிலும் நிலைகொண்டுள்ளது. இது இன்று பிற்பகல் வரை வடக்கு திசை நோக்கி நகரும் பின்னர் வளைந்து வடக்கு வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இடையே கரையை கடக்கும். இன்று மாலை புயலாகவும் பின்னர் தீவிர புயலாகவும் மாற உள்ளது
குறிப்பாக ஹரீஹரேஷ்வர் மற்றும் டாமன் இடையே மூன்றாம் தேதி பிற்பகல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்கள் வட கிழக்கு மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிக்கு நாளை வரை செல்ல வேண்டாம். கர்நாடகா, கோவா, குஜராத், மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகளுக்கும் செல்ல வேண்டாம் என தெரிவித்துள்ளது.