போலியான புகைப்படங்களை பரப்ப வேண்டாம் என சமூக வலைத்தளவாசிகளுக்கு சி.ஆர்.பி.எஃப் கேட்டுக்கொண்டுள்ளது.
நெட்டிசன்களுக்கு சி.ஆர்.பி.எஃப் விடுத்துள்ள கோரிக்கையில், சமூக வலைத்தளங்களில் வீரமரணமடைந்த எங்கள் தியாகிகளின் உடல் பாகங்கள் தொடர்பாக சில போலியான புகைப்படங்களை பரப்பி வருகின்றனர். நாங்கள் ஒற்றுமையாக இருக்கும் நிலையில், வெறுப்புணர்வை தூண்டுவதற்கு இந்தப் புகைப்படங்கள் பகிரப்படுகின்றன. தயவு செய்து அந்த போலிகளை பகிரவோ, பரப்பவோ அல்லது லைக் போடவோ செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போலிகளை பரப்புபவர்கள் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், சி.ஆர்.பி.எஃப் இணையத்திற்கு (webpro@crpf.gov.in) அனுப்புமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். இந்த கொடூரத் தாக்குதலில் 40 வீரர்கள் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்களது உடல்கள் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. இந்த தாக்குதலையடுத்து, பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் தயாராகிவருகிறது. ராணுவத்திற்கு முழு அதிகாரத்தையும் வழங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.