இந்தியாவில் நக்சல் அமைப்பினர் தாக்கம் அதிகமுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரும் ஒன்று. நக்சல் பாதிப்பு அதிமுள்ள மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்துவதும் இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடத்துவதும் அங்கு தொடர்கதையாக நடைபெற்ற வண்ணம் உள்ளது. இந்த நிலையில், சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் சமீபத்தில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையின்போது தேனீக்கள் கொட்டியதில் பாதுகாப்புப் படையினரின் மோப்ப நாய் பலியாகி உள்ளது.
சத்தீஸ்கர் மற்றும் தெலங்கானா எல்லையில் அமைந்துள்ள கொர்கோட்டாலு மலைப்பகுதியில் (பிஜாப்பூர் மற்றும் முலுகு மாவட்டங்கள்) நக்சல்களுக்கு எதிரான பாதுகாப்புப் படையினரின் 21 நாள் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த மே 11ஆம் தேதியுடன் இத்தாக்குதல் நடவடிக்கை நிறைவடைந்தது. இக்காலகட்டத்தில், அம்மாநில காவல் துறையினர் மற்றும் மத்திய ரிசர்வ் காவல் படையினர் இணைந்து மேற்கொண்ட இந்தத் தாக்குதலில் 31 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
முன்னதாக, கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று, அங்குள்ள வனப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது பாதுகாப்புப் படையினரை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதில், மத்திய ரிசர்வ் காவல் படையினருக்குச் சொந்தமான ‘ரோலோ’ எனும் 2 வயதுடைய பெல்ஜியன் ஷெப்பர்டு வகை மோப்ப நாயையும் தேனீக்கள் கொட்டியுள்ளன. தேனீக்களிடமிருந்து ரோலோவைக் காப்பாற்றும் முயற்சியில் அதன்மீது பாலிதீன் தாளைக் கொண்டு மூடியுள்ளனர்.
அதனுள் புகுந்த தேனீக்கள் தொடர்ந்து தாக்கியதில் ரோலோ அந்த தாளைவிட்டு வெளியே ஓடியுள்ளது. மேலும், சுமார் 200க்கும் மேற்பட்ட தேனீக்கள் தாக்கியதில் ரோலோ அங்கேயே மயங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து, ரோலோவை மீட்ட பாதுகாப்புப் படையினர், கால்நடை மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர். அங்கு அதனைப் பரிசோதித்த மருத்துவர்கள் ரோலோ ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். பணியின்போது பலியான ரோலோவுக்கு, மத்திய ரிசர்வ் காவல் படையின் உயர் அதிகாரி பாராட்டுப் பதக்கத்தை வழங்கியுள்ளார். முன்னதாக, நக்சல்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட 21 நாள் தாக்குதல் நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினரின் தரப்பில் ‘ரோலோ’ எனும் மோப்ப நாய் மட்டும் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகாவின் பெங்களூரு அருகே உள்ள தாராலுவில் உள்ள CRPF நாய் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற பிறகு, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ரோலோ மத்திய ரிசர்வ் காவல் படையில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.