இந்தியா

சாய்னா நேவால் மீது விமர்சனம் - நடிகர் சித்தார்த் மீது வழக்குப்பதிவு

Veeramani

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலை தரக்குறைவாக விமர்சித்த புகாரில், நடிகர் சித்தார்த் மீது ஹைதராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தில் பிரதமருக்கு ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாக பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு நடிகர் சித்தார்த் பதிவு செய்த ஒரு ட்வீட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு, சாய்னாவின் கணவர் பாருப்பள்ளி கஷ்யப் தொடங்கி அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தனது பதிவுக்கு மன்னிப்புக்கோரி நடிகர் சித்தார்த், கடிதம் ஒன்றை வெளியிட்டார். அதில், தாம் பதிந்த முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக மன்னிப்பு கோருவதாகவும், சரியான கருத்தை கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள சாய்னா, சித்தார்த்தின் மன்னிப்பை ஏற்பதாகவும் அவரை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கடப்பாவைச் சேர்ந்த இந்து ஜனா சக்தி பிரேரேனா என்பவர் அளித்த புகாரின் பேரில், சித்தார்த் மீது ஹைதாராபாத் சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தவிர சென்னை காவல் துறையினரும் சித்தார்த்தின் பதிவு குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்