இந்தியா

கேரளா: 5 வயது குழந்தை இறப்பில் தெரியவந்த திடுக்கிடும் உண்மை

webteam

கேரளாவில் ஐந்து வயது குழந்தை கழுத்து இறுக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் முக்கியத் திருப்பமாக, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. கேரளாவை அதிர வைத்துள்ள இந்த சம்பவத்தில், கொடுஞ்செயலில் ஈடுபட்டவரிடம் காவல்துறையினர் நேரடி வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

இடுக்கி மாவட்டம் வண்டிபெரியார் அருகே கடந்த ஆண்டு ஜூன் 30 ஆம்தேதி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களான பெற்றோரின் 5 வயது குழந்தை வீட்டில் வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிறு இறுக்கி இறந்தநிலையில் மீட்கப்பட்டது. குழந்தை விளையாடும்போது கழுத்து இறுக்கி இறந்ததாக கூறப்பட்ட நிலையில், உடற்கூறு ஆய்வில், குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து கொலை வழக்காக மாற்றிப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினர், அந்த குடும்பத்துடன் நட்பில் இருந்த அர்ஜூனன் என்ற 29 வயது நபரை கைது செய்தனர்.

விசாரணையில், ஐந்து வயது குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்ததை அர்ஜூனன் ஒப்புக்கொண்டார். சம்பவம் நடந்த அன்றும், சிறுமியை பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியபோது இறந்துவிட்டதால், வாழைத்தார் தொங்கவிடப்படும் கயிற்றில் கட்டி தொங்க விட்டுள்ளார். இந்த கொடூரத்தை அரங்கேற்றியபிறகு குழந்தையின் இறுதிச்சடங்கிலும் பங்கேற்று சாதாரணமாக பழகியுள்ளார். அர்ஜூனனின் குற்றம் உறுதி செய்யப்பட்டதையடுத்து சம்பவ இடங்களுக்கு அழைத்துச்சென்று அவரது வாக்குமூலத்தை காவல்துறையினர் வீடியோவாக பதிவு செய்தனர்.

போக்சோ மற்றும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட அர்ஜூன், தொடுபுழா மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.