இந்தியா

ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சீதாராம் யெச்சூரி தடுத்து நிறுத்தம்!

webteam

காஷ்மீர் சென்ற கம்யூனீஸ்ட் தலைவர்கள் சீதாராம் யெச்சூரி, டி.ராஜா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, அங்குள்ள தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். காஷ்மீர் நிலவரம் குறித்து விவாதிக்க, டெல்லியில் இருந்து, காஷ்மீர் சென்ற காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் அவர், டெல்லிக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்நிலையில் காஷ்மீரில் உள்ள கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா ஆகியோர் இன்று காலை காஷ்மீர் சென்றனர். ஸ்ரீநகர் விமான நிலையத்தில் இறங்கிய அவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். காஷ்மீருக்குள் நுழைய அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் டெல்லிக்கே திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று தெரிகிறது.