இந்தியா

3 வயது குழந்தைக்கு வன்கொடுமை.. குற்றவாளிக்கு அரிதினும் அரிதான தீர்ப்பளித்த போக்சோ கோர்ட்!

JananiGovindhan

மூன்று வயது பெண் குழந்தையை கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவனுக்கு சாகும் வரை தூக்கிலிடும்படி உத்தர பிரதேசத்தில் உள்ள போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

உத்தர பிரதேசத்தின் முசாஃபர்நகரில் உள்ள ஜன்சத் டவுன் பகுதிய்யைச் சேர்ந்த மூன்று வயது பெண் குழந்தையை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12ம் தேதி சோனி என்கிற சுரேந்தரும், ராஜேஷும் மோட்டார் சைக்கிளில் வைத்து கடத்தி, காட்டுப் பகுதியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக தாக்கியிருக்கிறார்கள்.

இதனால் மூர்ச்சையாகிப் போன அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த போது, குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து பாதிக்கப்பட்ட குழந்தையின் தாயார் கொடுத்த புகாரின் பேரில், சுரேந்தர் மற்றும் ராஜேஷ் மீது, 363 (கடத்தல்) , 302 (கொலை செய்தல்) , 120B (குற்றவியல் சதி) ஆகிய பிரிவுகளிலும், பாலியல் வன்கொடுமை செய்ததற்காக போக்சோ சட்டத்தின் கீழும் வழக்குப்பதிந்து கைது செய்திருக்கிறது உத்தர பிரதேச போலீஸ்.

இந்த வழக்குத் தொடர்பான விசாரணையின் போது “இது அரிதினும் அரிதான வழக்கு” (rarest of rare case) எனக் குறிப்பிட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி பாபுராம் குற்றவாளி சோனி என்கிற சுரேந்தரை சாகும் வரை தூக்கில் இடவேண்டும் என்றும், மற்றொரு குற்றவாளியான ராஜேஷுக்கு வாழ்நாள் சிறைத் தண்டனையும் கொடுத்து அதிரடி தீர்ப்பளித்திருக்கிறார்.

நடந்த சம்பவத்தை மாவட்ட அரசு வழக்கறிஞர் ராஜிவ் ஷர்மாவும், போக்சோ வழக்கறிஞர் தினேஷ் ஷர்மாவும் PTI செய்தி நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்கள். பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தர பிரதேச போக்சோ நீதிமன்றம் அளித்துள்ள தண்டனையும் தீர்ப்பும் பாலியல் குற்றங்களிலும் ஈடுபடும் அனைவருக்கும் உற்ற பாடமாக இருக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.