இந்தியா

நித்தியானந்தா ஆசிரமத்தில் பெண் குழந்தைகள் அடைத்துவைப்பு?

webteam

நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்துவைக்கப்பட்டுள்ள தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெங்களூருவை சேர்ந்த பெற்றோர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 

அவர்கள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஆட்கொணர்வு மனுவில், கடந்த 2013-ஆம் ஆண்டு தங்களின் நான்கு பெண் குழந்தைகளை பெங்களூருவில் நித்தியானந்தா நடத்திவரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்ததாக குறிப்பிட்டுள்ளனர். 

அதன் பிறகு தங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் நான்கு குழந்தைகளையும் அகமதாபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு நிர்வாகம் அனுப்பிவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். குழந்தைகளை பார்க்க அகமதாபாத் சென்றபோது அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், காவல்துறையின் உதவியுடன் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு வந்ததாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள மேலும் இரண்டு பெண் குழந்தைகளை மீட்டுத்தருமாறு பெற்றோர் மனுவில் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, பெற்றோரின் புகாரை அடுத்து நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.