இந்தியா

ஆயுஷ் கொரோனா ஆலோசனை ஹெல்ப்லைன் '14443' - நாடு தழுவிய அளவில் துவக்கம்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தொடர்பான பிரச்னைகளுக்கு, ஆயுஷ் அடிப்படையிலான அணுகுமுறைகளையும், தீர்வுகளையும் வழங்குவதற்காக 14443 என்ற பிரத்யேக ஹெல்ப்லைன் ஒன்றை மத்திய ஆயுஷ் அமைச்சகம் துவக்கியுள்ளது. கட்டணமில்லா இந்தத் தொலைபேசி ஹெல்ப்லைன் எண் 14443 - இந்தியா முழுவதும் காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 வரை வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும்.

இந்த ஹெல்ப்லைன் மூலம் ஆயுர்வேதம், ஹோமியோபதி, யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா ஆகிய பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர்கள் பொது மக்களின் கேள்விகளுக்கு தீர்வு சொல்வார்கள். இந்த வல்லுநர்கள், நோயாளிகளுக்கு ஆலோசனைகளையும், தீர்வுகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல் அருகிலுள்ள ஆயுஷ் வசதிகள் குறித்தும் அவர்களுக்கு வழிகாட்டுவார்கள்.

கொரோனா தொற்றுக்கு, மறுவாழ்வு மற்றும் மேலாண்மை அணுகுமுறைகளையும் நிபுணர்கள் பரிந்துரைப்பார்கள். ஹெல்ப்லைன் ஐ.வி.ஆர் (இன்டராக்டிவ் வாய்ஸ் ரெஸ்பான்ஸ்) முறையில் செயல்படுகிறது. தற்போது இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஆலோசனை வழங்கப்படுகிறது. விரைவில், பிற மொழிகளிலும் கிடைக்கும்.

ஹெல்ப்லைனில் ஒரே நேரத்தில் 100 அழைப்புகளை எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத்தில் திறன் அதிகரிக்கப்படவுள்ளது. ஸ்டெப்ஒன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் உதவியுடன், ஆயுஷ் அமைச்சகம் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.