இந்தியா

இன்று எண்ணப்படுகிறது குடியரசுத் தலைவர் தேர்தல் வாக்குகள் - எப்போது முடிவு தெரியும்?

நிவேதா ஜெகராஜா

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மதியம் முன்னணி நிலவரம் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24ஆம் தேதி முடிவடைகிறது. எனவே நாட்டின் 15ஆவது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் கடந்த 18ஆம் தேதி நடைபெற்றது. அதில், பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். நாடாளுமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் வாக்குகளை பதிவு செய்தனர். அதே போல், மாநிலங்களின் தலைமைச் செயலகங்களில் முதலமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வாக்களித்தனர்.

அதனைத் தொடர்ந்து அன்று மாலையே மாநிலங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், பதிவான வாக்குகள் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று எண்ணப்படுகிறது. முற்பகல் 11 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க உள்ள நிலையில், மதியம் ஒரு மணிக்கு முன்னணி நிலவரம் தெரிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது