கார்ப்பரேட் நிறுவனங்களிடம் நன்கொடை பெற்ற கட்சிகளில் பா.ஜ.க.வுக்கு முதலிடம் கிடைத்துள்ளது. அந்தக் கட்சி நான்கு ஆண்டுகளில் ரூ.705 கோடியே 81 லட்சம் பெற்றுள்ளது.
அரசியல் கட்சிகள் பெறும் நன்கொடை குறித்து தேர்தல் கமிஷனில் வருடம் தோறும் கணக்கு சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, கடந்த 2012-2013-ம் நிதி ஆண்டில் இருந்து 2015-2016-ம் நிதி ஆண்டுவரை தேசிய கட்சிகள் சமர்ப்பித்த நன்கொடை விவரங்களை டெல்லியை சேர்ந்த ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் வெளியிட்டுள்ளது.
இந்த 4 ஆண்டுகளில் பா.ஜனதா, காங்கிரஸ் உள்ளிட்ட 5 தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை ரூ.1,070 கோடியே 68 லட்சம். இதில், கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து பெற்ற நன்கொடை மட்டும் ரூ.956 கோடியே 77 லட்சம். இதில் பா.ஜ.க கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து ரூ.705 கோடியே 81 லட்சம் நன்கொடை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதையடுத்து, காங்கிரஸ் கட்சி ரூ.198 கோடியே 16 லட்சமும், தேசியவாத காங்கிரஸ் ரூ.50 கோடியே 73 லட்சமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ரூ.1 கோடியே 89 லட்சமும், இந்திய கம்யூனிஸ்ட் 18 லட்சமும் நன்கொடை பெற்றுள்ளன. ரியல் எஸ்டேட் நிறுவனங்கள்தான் அதிக நன்கொடை தந்துள்ளதாகக் கூறப்படுகிறது.