இந்தியா

கொரோனா ஆய்வு : சென்னை வரும் மத்தியக் குழு

webteam

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகக் குழு சென்னைக்கு வருகை தரவுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இந்தியாவில் சமூகப் பரவல் எனப்படும் மூன்றாவது கட்டத்திற்கு கொரோனா சென்றுவிட்டதாக அஞ்சப்படுகிறது.

இதனால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கண்காணிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சக் குழு இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருகை தரவுள்ளது. அந்த வகையில் சென்னைக்கு மத்தியக் குழு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை இணைச் செயலாளர் தெரிவித்துள்ளார். சென்னை தவிர்த்து அகமதாபாத், சூரத், ஹைதராபாத் ஆகிய நகரங்களுக்கும் மத்திய அரசின் குழு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.