இந்தியா

கொரோனா எதிரொலி: முகக் கவசங்களின் தேவை அதிகரிப்பு: சில இடங்களில் திருடு போவதாக புகார்..!

webteam

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள உதவும் முகக் கவசங்களின் கையிருப்பு அதிவேகமாக குறைந்து வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது.

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தற்போது வரை மூவாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தெலங்கானா மற்றும் டெல்லியில் உள்ள இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனிடையே இந்தியாவில் மொத்தமாக 12 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு அரசு சார்பில் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து யாரும் பீதி அடைய வேண்டாம் என பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்ள உதவும் முகக் கவசங்களின் கையிருப்பு அதிவேகமாக குறைந்து வருவதாக சர்வதேச சுகாதார நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. மேலும் முகக் கவசங்களின் கையிருப்பு குறைந்து, தேவை அதிகரித்து வருவதால் அவற்றை பதுக்குவது அதிகரிக்கும் என சர்வதேச சுகாதார நிறுவனம் அச்சம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் பிரான்ஸ் நாட்டில் ஒரு மருத்துவமனையில் இருந்து 2 ஆயிரம் முகக் கவசங்கள் திருடு போனதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் பயத்தால் தலைநகர் டெல்லியிலும் ‘என் 95’ வகை முகக் கவசங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. வழக்கமாக 150 ரூபாய்க்கு விற்கப்படும் முகக் கவசங்கள் தற்போது 500 ரூபாய்க்கு விற்கப்படுவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இது மட்டுமல்லாமல் பல கடைகளில் முகக் கவசங்கள் தீர்ந்து போய்விட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல கைகளை சுத்தப்படுத்தும் திரவத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.