இந்தியா

“வெளியே போகாதிங்கப்பா..”: தந்தையை தடுக்கும் க்யூட்டான மழலை - வைரல் வீடியோ

rajakannan

அருணாச்சலப்பிரதேசத்தில் வீட்டை விட்டு வெளியே செல்ல முயன்ற தந்தையை அவரது குட்டி மகள் தடுத்து நிறுத்தும் க்யூட்டான வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் சுமார் ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையில் பலரும் பல சிரமங்களை தாங்கிக் கொண்டு வீட்டினை விட்டு வெளியே வராமல் பொறுப்பாக வீட்டிலே இருக்கிறார்கள். ஆனால், சிலர் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுமோ என சாலைகளில் சுற்றித்திரிந்து போலீசாரிடம் வாங்கிக்கட்டிக் கொள்கிறார்கள். எதேதோ காரணங்களைச் சொல்லி வெளியே நடமாடுகிறார்கள்.

அப்படித்தான் அருணாச்சலப்பிரதேசத்திலும் குடும்பஸ்தன் ஒருவர் வீட்டிலிருந்து வெளியே செல்ல ஆயத்தமாகி இருக்கிறார். ஆனால், அவருடைய செல்லக்குழந்தை கதவினை மூடிவிட்டு அவரை தடுத்து நிறுத்தியுள்ளது. ‘பிரதமர் வீட்டை விட்டு வெளியே போகக் கூடாது என்று சொல்லி இருக்கிறார். வீட்டிலேயே இருங்கள்’ என்று மழலைக் கொஞ்சும் குரலில் அந்த சிறுமி தந்தையை எச்சரிக்கிறாள்.

சிறுமி பேசும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. இதனை அருணாச்சலப்பிரதேச முதலமைச்சர் பெமா கண்டு ஷேர் செய்துள்ளார். சிறுமியின் முகபாவத்தையும் அவர் வெகுவாக வியந்து கூறியுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 66 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர்.

ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் இதுபோன்று பலரும் பல வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். அதில் விழிப்புணர்வு வீடியோக்கள் அதிக அளவில் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டே வருகின்றன.