பணப் பற்றாக்குறை, உணவு தட்டுப்பாடு போன்ற காரணங்களால் டெல்லியிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு திரும்பி சென்றுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவையொட்டி, மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில் டெல்லியிலிருந்து கூட்டம் கூட்டமாக நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் தூரத்தை குடும்பத்தினருடன் நடந்தே கடந்து, சொந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள். உணவு மட்டுமல்ல, குடிக்க நீர் கூட இல்லாமல் நாள் கணக்கில் நடையாய் நடந்து லக்னோ, கான்பூர், வாரணாசி, காசியாபாத் போன்ற நகரங்களுக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது இந்த கூலித் தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவர்கள் அனைவரும் சொந்த ஊர்களுக்கு பேருந்தில் கட்டணமின்றி அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்தத் தொழிலாளர்கள் பசியாற ஆயிரக்கணக்கான உணவுப் பொட்டலங்கள் தயாரிக்கப்பட்டு, உடனுக்குடன் வழங்கப்படுகின்றன.
இதில் சிக்கல் என்னவென்றால் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் வந்து குவிந்திருக்கும் இவர்களிடம், சமூக விலகலை கடைபிடிக்குமாறு அறிவுறுத்துவது அரசுக்கு மாபெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனிடையே டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேசத்திற்கு புறப்படுவதற்காக பேருந்து நிலையங்களில் குவிந்த கூலித் தொழிலாளர்களை காவல்துறையினர் கலைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அரசின் உத்தரவை மீறியதாக 150 வழக்குகளை பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை பிடித்தும் வைத்துள்ளனர்.
இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது “ ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கவில்லை எனில், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் முயற்சி தோல்வியில் முடியும். புலம்பெயர்ந்த கூலித் தொழிலாளர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தங்குமிட வசதியை மாநில அரசு செய்து வருகிறது” என்று கூறினார்.
இது குறித்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் கூறும்போது, கையில் இருந்த சொற்பத்தொகை கரைந்துவிட்டதாலும், உணவு கிடைக்காததாலும் இனி டெல்லியில் இருப்பதில் எந்த அர்த்தம் இல்லை என்பதால் சொந்த ஊருக்கு திரும்பியதாக தெரிவித்தனர்.