இந்தியா

கொரோனா எதிரொலி : இந்திய சுற்றுலாத்துறை 8,500 கோடியை இழக்க வாய்ப்பு

webteam

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் பயணம், சுற்றுலா மற்றும் விமானபோக்குவரத்துத்துறை அடுத்த பத்து நாட்களில் சுமார் 8500 கோடி ரூபாய் இழப்புகளை சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் வெளிநாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளிக்க சுற்றுலா மற்றும் பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்பின் சுற்றுலாத்துறை குழுவின் அறிக்கையின்படி பல சிறிய மறும் நடுத்தர விடுதிகள், ரிசாட்ர்டுகள் மற்றும் வாடகை வாகன நிறுவனங்கள் மூடப்பட்டு பணியாளர்கள் சம்பளமில்லா விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையில் செயல்பாட்டு மூலதனம் 60 முதல் 80 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விசாக்கள் வழங்குவதை முழுமையாக நிறுத்தாமல் குறிப்பிட்ட சில நகரங்களுக்கு மட்டும் பயணிகள் வருவதை அனுமதிக்கலாம் என அத்துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.

இதற்கிடையே இத்தாலியிலிருந்து ஆந்திராவுக்கு வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு நெல்லூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அவருடன் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது உறவினர்கள் 5 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.