இந்தியா

நாளை முதல் 12-14 வயதுடைய சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி துவக்கம்

webteam

12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்கு பதிவு செய்யும் நடைமுறையும் நாளை துவங்கும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி 16-ந் தேதி தொடங்கியது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கடந்த ஜனவரி 3-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் இணைநோய் கொண்ட 60 வயதை தாண்டியவர்களுக்கு 3-வது டோஸாக பூஸ்டர் தடுப்பூசி, ஜனவரி 10-ந் தேதி முதல் போடப்பட்டு வருகிறது.

12 வயதை தாண்டிய சிறுவர்களுக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வயதினருக்கு செலுத்த ‘கோர்பேவேக்ஸ்’ என்ற தடுப்பூசிக்கு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் அளித்தது. இந்த தடுப்பூசியை ஐதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது.

12 - 14 வயது சிறார்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. விஞ்ஞானிகளுடன் ஆலோசனை நடத்தியதன் அடிப்படையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு 16-ந் தேதி முதல் தடுப்பூசி செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

12 வயதை பூர்த்தி செய்த சிறார்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அவர்களுக்கு ‘கோர்பேவேக்ஸ்’ தடுப்பூசி செலுத்தப்படும். இதுபோல், பூஸ்டர் தடுப்பூசி செலுத்த 60 வயதை தாண்டியவர்களில் இணைநோய் கொண்டவர்கள் என்ற கட்டுப்பாடு நீக்கப்படுகிறது. 60 வயதை கடந்த அனைவருக்கும் 16-ந் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி போடப்பட உள்ளது. மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியாவும் இதே தகவலை தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.