இந்தியா

கொரோனா தடுப்பு: மாநில முதல்வர்களுடன் 13-ம் தேதி பிரதமர் ஆலோசனை

Veeramani

நாடெங்கும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 13ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளார்.

இந்தியாவில் தினசரி கொரோனா தொற்றுகள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதையடுத்து பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தொற்று பரவலின் வேகம் குறைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல், மகர சங்கராந்தி போன்ற பண்டிகைகள் இன்னும் சில நாட்களில் நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. எனவே தொற்று பரவல் வேகம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி 13-ஆம் தேதி காணொலி முறையில் ஆலோசனை நடத்த உள்ளார். இதில் தற்போதைய கொரோனா நிலவரம், தொற்று பரவல் தடுப்புக்காகவும் சிகிச்சைக்காகவும் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் தடுப்பூசி பணிகள் குறித்தும் பிரதமர் கேட்டறிவார் எனக் கூறப்படுகிறது