இந்தியா

ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு

webteam

ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவுக்கு இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1637 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கடுமையான கெடுபிடிகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் சிலர் அரசின் உத்தரவுகளை மீறி பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் நடத்தி வருகின்றனர்.

பொதுக்கூட்டங்கள், மாநாடுகள், வழிபாட்டுத் தலங்கள் என எங்கும் மக்கள் செல்லக்கூடாது என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையும் மீறி சிலர் கூட்டம் போடுவதால் நாளுக்கு நாள் வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே போகிறது.

பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் டெல்லி நிஜாமுதீன் பகுதியில்  சமீபத்தில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்பிய நிலையில் அவர்களில் பெரும்பாலோனோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். இவர்களில் 600க்கும் மேற்பட்டோரை தொடர்புகொள்ள முடியவில்லை என கூறியுள்ள தமிழக சுகாதாரத்துறை, தாமாக முன்வந்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக்கொண்டிருந்தது. டெல்லி சென்று திரும்பிய 28 பேர் மற்றும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் என 88 பேர் திருச்சி அரசு மருத்துவமனையின் கொரோனா சிகிச்சை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டிருப்பதாகவும், ஆய்வு முடிவுகள் வெளிவந்த பின்னரே கொரோனா பாதிப்பு உள்ளதா என்பது தெரியவரும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திராவில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றவர்கள் எனத் தெரியவந்துள்ளது. இதன்மூலம் ஆந்திராவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 87 ஆக உயர்ந்துள்ளது.