இந்தியா

அதிகரிக்கும் கொரோனோ - முகக்கவசத்தை கட்டாயமாக்கியது உ.பி. அரசு

ஜா. ஜாக்சன் சிங்

கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளதை அடுத்து, உத்தரப் பிரதேசத்தில் டெல்லியை ஒட்டிய மாவட்டங்களில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஒமைக்ரான் பரவல் முடிவடைந்ததை அடுத்து இந்தியாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்தது. நாளொன்றுக்கு ஆயிரத்துக்கும் குறைவாகவே தினசரி தொற்று பாதிப்பு பதிவாகி வந்தது. இந்த சூழலில், கடந்த சில தினங்களில் நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

குறிப்பாக, தலைநகர் டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனிடையே, இன்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2,183 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது நேற்றைய பாதிப்பை காட்டிலும் 90 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் 214 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து, உ.பி. அரசு வெளியிட்ட அறிக்கையில், "கொரோனா பரவலை தடுக்கும் வகையில் டெல்லிக்கு அருகே உள்ள மாவட்டங்களான காஸியாபாத், கவுதம்புத் நகர், ஹாப்பூர், மீரட், புலந்த்சாகர், பாஹ்பத் ஆகிய மாவட்டங்களில் அனைவரும் முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும். தலைநகர் லக்னோவிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்படுகிறது. டெல்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து உத்தரப் பிரதேசத்துக்கு வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.