நடனம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும்போதே எதிர்பாராதவிதமாக திடீரென கீழேவிழுந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகின்றன. அதிலும், கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் பலர் மாரடைப்பால் திடீரென உயிரிழப்பது தொடர்கதையாகி வருகின்றன. நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமின்றி, குழந்தைகளும்கூட மாரடைப்புக்குப் பலியாகி வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் ஹோலிப் பண்டிகைக்காகப் பணியில் ஈடுபட்டிருந்த 54 வயது காவல் ஆய்வாளர் மாரடைப்பால் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும், நேற்று கோலிப் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இதே நாளில் இஸ்லாம் மதத்தினரின் வெள்ளிக் கிழமை தொழுகையும் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பலபடுத்தப்பட்டிருந்தது. அதன்படி, மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தின் சமூகரீதியாக மிகவும் பதற்றம் நிறைந்த பெட்மா நகரில் இன்ஸ்பெக்டர் சஞ்சய் பதக் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவர், தனது சக ஊழியர்களிடம் கடுமையான மார்பு வலி இருப்பதாகக் கூறியுள்ளா. இதையடுத்து, அவரை இந்தூரில் உள்ள பம்பாய் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வழியிலேயே இறந்துவிட்டதாகவும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.