மீனாட்சி நடராஜன் எக்ஸ் தளம்
இந்தியா

காங். வேட்பாளர் மனு நிராகரிப்பு.. தேர்தல் ஆணையத்தில் புகார்.. ம.பியில் நடப்பது என்ன?

மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது.

Prakash J

மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் கட்சி நேற்று இரவே போராட்டத்தில் ஈடுபட்டது. மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பைத் திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் வலியுறுத்துகிறது.

நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் ஆறு ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. இதனால் அந்த இடங்களுக்கு ஜூன் 18ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், மத்தியப் பிரதேசத்தில் 3 இடங்களுக்கும் தேர்தல் நடைபெற இருக்கிறது. எம்எல்ஏக்கள் ஆதரவு அடிப்படையில் பாஜக 2 இடங்களிலும் காங்கிரஸ் ஓர் இடத்திலும் வெல்லும்நிலை உள்ளது. இந்த நிலையில், மத்தியப் பிரதேச மாநிலங்களவை தேர்தலில் காங். வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நேற்று நிராகரிக்கப்பட்டது. தெலங்கானாவில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கை அவர் தன்னுடைய பிரமாணப் பத்திரத்தில் மறைத்ததாக பாஜக குற்றச்சாட்டிஞ்யதன் காரணமாக, தேர்தல் அதிகாரியால் அது நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சி நேற்று இரவே போராட்டத்தில் ஈடுபட்டது. காங்கிரஸ் தலைவர் கே.சி.வேணுகோபால் தலைமையிலான குழுவினர் தேர்தல் ஆணையத்தை சந்திக்க முயன்றனர். ஆனால், அக்குழுவினர் உள்ளே அனுமதிக்கப்படாததால், தலைவர்கள் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு வெளியே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பைத் திரும்பப் பெறுமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் வலியுறுத்துகிறது. இதற்காக மூத்த வழக்கறிஞரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அபிஷேக் மனு சிங்வி தலைமையிலான காங்கிரஸ் குழுவினர், தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்தித்து விரிவான மனு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். அதில், ‘தேர்தல் சட்டத்தின்கீழ் வெளியிடப்பட வேண்டிய எந்தவொரு குற்ற வழக்கும் மீனாட்சி நடராஜன் மீது இல்லாதபோதிலும், அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அபிஷேக் மனு சிங்வி, “ஒரு வேட்புமனு தவறாக நிராகரிக்கப்பட்டால், தேர்தல் ஆணையம் நீண்டகால வழக்கு நடவடிக்கைகளுக்காகக் காத்திருக்கத் தேவையில்லை. இது மிகவும் மோசமான, திரிபுபடுத்தப்பட்ட, சமமற்ற ஒரு போட்டிச் சூழலை உருவாக்குகிறது என்பதைத் தேர்தல் ஆணையம் உணர்ந்துகொள்ளும் என்று நாங்கள் நம்புகிறோம். சமமற்ற போட்டிச் சூழல் ஜனநாயகத்தின் இதயத்தையே தாக்குகிறது. அதை மீறுவது, அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் இதயத்தையே மேலும் தாக்குகிறது. ஆகையால், இதில் உடனடி முடிவு எடுக்குமாறு அவர்களிடம் கோரியுள்ளோம்” என்றார்.