இந்தியா

இலவச ஸ்மார்ட்போன்கள், மாதம் ரூ.1000: உ.பியில் தேர்தல் வாக்குறுதி

இலவச ஸ்மார்ட்போன்கள், மாதம் ரூ.1000: உ.பியில் தேர்தல் வாக்குறுதி

webteam

உத்தரபிரதேச தேர்தலில் கூட்டணி அமைத்துள்ள சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இருவரும் கூட்டாக தேர்தல் அறிக்கை வெளியிட்டனர்.

இந்தியாவிலே அதிக சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்ற மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 300 தொகுதியை கைப்பற்ற வேண்டும்.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இதில் தங்கள் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் பொது செயல் திட்டம் ஒன்றை வெளியிட்டனர்.

இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ச்சி மூலம் வேலைவாய்ப்பு உத்தரவாதம், விவசாய கடன் தள்ளுபடி, மலிவான மின்சக்தி மற்றும் முறையான ஊதியம்.

ஒரு கோடி ஏழை குடும்பங்களுக்கு ரூ.1,000 மாதாந்திர ஓய்வூதியம். அரசு வேலைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தவிர பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தலில் 50 சதவீத இட ஒதுக்கீடு. கிராமப்புறங்களில் மின்சாரம், சாலை மற்றும் குடிநீர் போன்றவை ஐந்து ஆண்டுகளுக்குள் வழங்க நடவடிக்கை என அந்த பொது செயல் திட்டத்தில் வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

10 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு இலவச மிதிவண்டி, 10 லட்சம் ஏழை மற்றும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீடுகள், அனைத்து மாவட்டங்களிலும் நான்கு வழி சாலைகள், ஆறு முக்கிய நகரங்களில் மெட்ரோ சேவை வழங்கப்படும். காவல்துறை நவீனமயமாக்கல். சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் நலத்திட்டங்கள் வழங்கப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.