இந்தியா

‘ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமட்டோ’: தக்காளிகளை முதலீடு செய்து கூடுதல் தக்காளிகளை வட்டியாகப் பெறலாம்

webteam

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவில், ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமட்டோ’ என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கியை தொடங்கி இருக்கின்றனர். தக்காளிகளை இந்த வங்கியில் அரைகிலோ தக்காளியை முதலீடு செய்து, ஆறு மாதம் க‌ழித்து வட்டியுடன் ஒரு கிலோ தக்காளிகளை பெறலாம்.

வடமாநிலங்களில் தக்காளியின் விலை கிலோ 100 ரூபாயை தாண்டி விற்பனையாவது ஏழை எளிய மக்களை தக்காளியற்ற சமையலை நோக்கி தள்ளியுள்ளது. இந்நிலையில், தக்காளியின் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டதாகக் கூறி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் கட்சியினர் தக்காளி வங்கியை தொடங்கி புதுவித போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் டொமட்டோ’ என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்த வங்கியில் மக்கள் தங்களிடம் உள்ள தக்காளியை முதலீடு செய்து வைக்கலாம் என்றும் அவர்களுக்கு தேவைப்படும்போது கூடுதல் தக்காளிகள் வட்டியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். மக்கள் பலரும் இந்த வங்கியில் தக்காளியை டெபாசிட் செய்து வருகின்றனர்.

ஏழைகளுக்கு குறைந்தவிலையில் தக்காளி வழங்கப்படும் என்றும் தக்காளி வாங்க கடன் வழங்கப்படும் என்றும் லக்னோ காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர். தக்காளிகளை வைத்துக்கொள்ள லாக்கர் வசதியும், தக்காளி வாங்க கடனுதவியும் இங்கு வழங்கப்படுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.