மும்பையில் ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த, கர்நாடகாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 13 பேர், ரகசிய இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த இரு கட்சிக ளையும் சேர்ந்த 13 எம்எல்ஏக்கள் பதவி விலகியதை அடுத்து, அம்மாநில அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த 13 பேரின் ராஜினாமாவை ஆளுநர் ஏற்றால், அரசு பெரும்பான்மையை இழந்து, கவிழ்ந்துவிடும். அதை தடுக்கும் விதமாக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் தலைவர்கள் தனித்தனியே தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்பிய முதலமைச்சர் குமாரசாமி, தனது கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். பதவி விலகிய எம்எல்ஏக்கள் தங்களது முடிவில் பிடிவாதமாக இருப்ப தால், ஆட்சியைத் தக்கவைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.
காங்கிரஸைச் சேர்ந்த துணை முதலமைச்சர் ஜி பரமேஷ்வரா, தனது கட்சியைச் சேர்ந்த மாநில அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆட்சித் தலைமையில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என்று அவர் திட்டவட்டமாகக் கூறினார். இந்தக் கூட்டத்தின் தொடர்ச்சியாக காங்கிரஸ் அமைச்சர்கள் 21 பேரும் அதிரடியாக பதவி விலகி, அது தொடர்பான கடிதங்களை மாநில காங்கிரஸ் தலைவரிடம் கொடுத்துவிட்டனர். ராஜினாமா செய்துள்ள எம்எல்ஏக்களின் கோபத்தைத் தணிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதனையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 9 அமைச்சர்களும் பதவி விலகியுள்ளனர். அமைச்சரவையை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பதவி விலகிய காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சிகளின் எம்எல்ஏக்கள் 13 பேரும் மும்பை யில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுடன், அமைச்சர் பதவியிலிருந்து விலகிய சுயேச்சை எம்எல்ஏ நாகேஷூம் இணைந்து கொண்டார். இந்நிலையில்,இவர்கள் நேற்றிரவு புனேவுக்கு செல்வதாக இருந்தது. பின்னர் கோவாவுக்குச் செல்ல திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் அவர்கள் மும்பையிலேயே ரகசிய இடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.