ரிசர்வ் வங்கி தன்னாட்சி அமைப்பு என்பதை மத்திய அரசு மறந்து விட்டதாக முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி ஆளுநராக பதவியேற்ற உர்ஜித் படேல் 2019-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதி வரை இப்பொறுப்பில் இருப்பார் என்றும் மத்திய அரசு தெரிவித்தது. ஆனால் ஒருமாதம் பதவிக்காலம் இருக்கும் நிலையில் தனது ராஜினாமாவை அறிவித்தார். தனது சொந்தக்காரணங்களுக்காக விலகுவதாக அவர் காரணம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து அடுத்த ஆளுநர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில் ஓய்வுப்பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
சக்தி காந்த தாஸின் நியமனம் குறித்து பலரும் கலவையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வெளிப்படையாக ஆதரித்தவர் என்பது சக்திகாந்த தாஸ் மீது வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனமாக இருக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், ரிசர்வ் வங்கியை தனக்கு சொந்தமானதாக மத்திய அரசு கருதுவதாக குற்றம்சாட்டியுள்ளார். ரிசர்வ் வங்கியின் ஆளுநராக சக்திகாந்த தாஸ் நியமிக்கப்பட்டிருப்பது குறித்தும் சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வெளிப்படையாக ஆதரித்த ஒருவர் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது கவலை கொள்ளச் செய்வதாக சிதம்பரம் கூறியுள்ளார். இருப்பினும் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தை சக்திகாந்த தாஸ் காப்பாற்றுவார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.