கர்நாடக மாநிலம் அரசு மருத்துவமனையில் ஆணுறை இல்லாததால் இளைஞர் ஒருவர் போராட்டம் நடத்தினார். இதனால் மருத்துவர்கள் தனியார் மருந்தகத்தில் இருந்து ஆணுறை வாங்கிக் கொடுத்து அவரை சமாதானப்படுத்தினர்.
கர்நாடக மாநிலம் சிக்மகளூரைச் சேர்ந்த கணேஷ் என்பவர் தனது மனைவியைச் சந்திக்க திப்தூர் சென்றார். அவர் வீட்டிற்க்குச் செல்லும் முன்பு அங்கு உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று ஆணுறை கேட்டுள்ளார். ஆனால் அங்கு ஆணுறை இல்லை. ஆணுறை தானியங்கி இயந்திரமும் இல்லை. இதனால் கோபமடைந்த கணேஷ், அங்கு வேலையில் இருந்த மருத்துவர்களையும், பணியாளர்களையும் கேட்டுள்ளார். அதற்கு அணுறை கையிருப்பு இல்லை என்று கையை விரித்துள்ளனர். கணேஷ் ஒரு கட்டத்திற்கு மேல் மருத்துவமனை வளாகத்திலேயே போராட்டம் நடத்த தொடங்கினார். மருத்துவர்களும், ஊழியர்களும் எவ்வளவோ சமாதானம் சொல்லியும் அவர் போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டார்.
இதனால் மருத்துவமனை ஊழியர்கள் தனியார் மருந்தகத்தில் ஆணுறை வாங்கி வந்து கணேசிடம் கொடுத்துள்ளனர். ஏன் இவ்வளவு களேபரம் செய்தீர்கள் என்று கேட்டதற்க்கு அவர், "எச்ஐவி மற்றும் பல பாலியல் தொடர்புடைய நோய்கள் விரைவில் தொற்றக் கூடியவை, அவற்றில் இருந்து தடுக்க ஆணுறை அவசியம். அரசு மருத்துவமனைகளில் ஆணுறைகள் கட்டாயம் இருக்க வேண்டும்" என்று கூறினார்.