முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மறைவு, நாட்டிற்கே பேரிழப்பு என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோருடன் சென்று வாஜ்பாய் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார். இதையடுத்து பேசிய அவர், வாஜ்பாயின் மறைவு இந்தியாவுக்கே பேரிழப்பு என்றார்.
மேலும் பேசிய அவர், “ பாரதிய ஜனதா கட்சியின் முதல் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் வாஜ்பாய். இலக்கியவாதி, சிறந்த பேச்சாளர், மக்களிடத்தில் அன்பாகக் பழகக் கூடியவர், நிர்வாகத் திறமைமிக்கவர். அப்படிப்பட்ட தேசப்பற்றுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவு இந்திய தேசியத்திற்கு மிகப்பெரிய பேரிழப்பு. அவரை பிரிந்துவாழும் அவரது குடும்பத்தினருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்நாடு சார்பாகவும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.