டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டம் நாடு முழுவதும் பெரும் கவனத்தை ஈர்த்ததுடன், அரசியல் வட்டாரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் போராட்டத்தின் விளைவாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியிருந்தார். இந்த நிலையில், போராட்டத்தில் பங்கேற்ற சில இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாக புதிய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பாஜகவில் இணையுமாறு சிலர் அழுத்தம் கொடுப்பதாகவும், மறுத்தால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிப்பதாகவும் போராட்ட ஒருங்கிணைப்பாளரும் கரப்பான் ஜனதா அமைப்பின் நிறுவனருமான அபிஜித் தீப்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக பேசிய அவர், போராட்டத்தில் பங்கேற்றவர்களின் தனிப்பட்ட தகவல்கள் சிலரது கைகளுக்குச் சென்றுள்ளதாகவும், அந்த தகவல்களைப் பயன்படுத்தி தொலைபேசி அழைப்புகள் மற்றும் மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னை பாஜகவில் இணையுமாறு வலியுறுத்தியதாகவும், மறுத்தால் குடும்ப உறுப்பினர்களுக்கு பிரச்னை ஏற்படும் என சிலர் மிரட்டியதாகவும் அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் மிக உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களால், தன்னைப் போன்ற ஒரு மாணவர் அச்சுறுத்தப்படுவதாகக் கூறப்படுவது வெட்கக்கேடானது என்று தீப்கே கூறினார்.
இதற்கிடையில், போராட்டத்தின்போது கவனம்பெற்ற சில பெண்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் பரப்பப்பட்டதாகவும், அவர்களுக்குச் சமூக வலைதளங்கள் மற்றும் தொலைபேசி வாயிலாக பாலியல் தொல்லைகள் மற்றும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் தனிப்பட்ட தகவல்கள் இணையத்தில் கசியவிட்டவர்கள் மீதும், அவர்களுக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.