குடியுரிமை ‘சட்டத் திருத்த மசோதா 2019’ என்ற மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதாவில் உள்ள விஷயங்கள் என்ன ?
குடியுரிமை சட்டத் திருத்த மசோதா 2019 பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து வந்த இஸ்லாமியர்கள் அல்லாத பிற 6 மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்க வழிவகை செய்கிறது. அதாவது இந்த நாடுகளிலிருந்து வந்த இந்து, பௌத்த, சமணம், கிறித்துவ, சீக்கிய மற்றும் பார்சி ஆகிய மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு குடியுரிமை அளிக்கிறது.
இந்த குடியுரிமையை பெற இவர்கள் அனைவரும் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் இந்தியாவிற்குள் குடியேறி இருக்கவேண்டும்.
இதற்கு முன்பு இருந்த குடியுரிமை சட்டத்தின்படி பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் இந்திய குடியுரிமையை பெற முடியாது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதேபோல,
ஒருவர் வேறு நாட்டைச் சேர்ந்தவராக இருந்தால், இந்திய குடியுரிமையை பெற அவர் 12 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். இந்த விதியை 5 ஆண்டுகளாக குறைத்து சட்டத் திருத்த மசோதா மாற்றியுள்ளது. அதன்படி, தற்போது ஒருவர் இந்தியாவில் 5 ஆண்டுகள் வசித்து இருந்தால், அவர் இந்திய குடியுரிமையை பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும், இந்த குடியுரிமை சட்டம் அசாம், மேகாலாயா, திரிபுரா மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கு செல்லாது. அதாவது அரசியலமைப்புச் சட்டத்தின் 6வது அட்டவணையிலுள்ள பகுதிகளுக்கு இந்தக் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அமல்படுத்தப்படாது.
அத்துடன் ‘Inner line Permit’ என்ற அனுமதியை பெற வேண்டிய மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகியவற்றிற்கும் இந்தக் குடியுரிமை சட்டத் திருத்தம் அமலுக்கு வராது.
காங்கிரஸ் ஏன் எதிர்கிறது?
இந்தச் சட்டத் திருத்ததின் மூலம் இந்த நாடுகளில் மத பிரச்னைகளால் இந்தியாவிற்கு வந்த மக்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்க வழிவகை செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கிறது.
அதேபோல இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. ஏனென்றால், குறிப்பிட்ட மதத்தை தவிர பிற மத மக்களுக்கு குடியுரிமை வழங்க வழி வகுக்கும் மசோதா இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் இது அடிப்படை உரிமையான சமத்துவம் (பிரிவு 14) மீறும் வகையில் உள்ளது எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த மசோதா 1985ஆம் ஆண்டு கையெழுத்து இடப்பட்ட 'அசாம் அகார்டு’ ஒப்பந்தத்தை மீறும் வகையில் உள்ளதால் இதற்கு வடகிழக்கு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன. ஏனென்றால், அந்த ஒப்பந்தத்தின்படி 1971ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதிக்கு பிறகு இந்தியாவிற்குள் வந்தவர்கள் இந்திய குடியுரிமையை பெற முடியாது. இதனை புதிய சட்டத் திருத்தம் மீறும் வகையில் உள்ளது. ஆகவே வடகிழக்கு மாநிலங்கள் எதிர்க்கின்றன.
திங்கட்கிழமை மசோதா தாக்கல்:
இந்த மசோதாவின் மொத்த அம்சங்களும் வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் போது தான் தெளிவாக தெரியவரும். அத்துடன் சர்ச்சைக் குரிய இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படுகிறதா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.